சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.74 திருத்துருத்தியும் (குத்தாலம்) - திருவேள்விக்குடியும்
பண் - காந்தாரம்
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
    வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
    என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.
1
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
    கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
    மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
    பழவினை உள்ளன பற்றறுத் தானை.
2
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
    கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
பல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
    போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
    தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.
3
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
    கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
    அருவினை உள்ளன ஆசறுத் தானே.
4
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
    பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
    எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
    உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.
5
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
    ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலமபித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
    இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.
6
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
    வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உறையுமா றறிகிலேன் எம்பெரு மானை
    உலகறி பழவினை அறவொழித் தானை.
7
ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
    புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
    அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.
8
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
    பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
    இருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
    மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.
9
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
    மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
    அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
    தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com